Friday, March 25, 2011

பசுமை உலக விழிப்புணர்வு: இளைஞர் சைக்கிள் பயணம்

ஊட்டி: பசுமை உலகம் ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த,மும்பையை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர் உலகம் முழுவதும் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

மும்பையை சேர்ந்தவர் வைபவ் தேசாய்(25). மென்பொருள் பொறியாளரான இவர் "மும்மை கோத்ரெஜ் இன்போ டெக்' நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இயற்கையை சார்ந்து வாழ்வது; உடல் நலனுக்காக சைக்கிள் பயணம் மேற்கொள்வது; சைக்கிள் பயணத்தின் முக்கியதுவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஆகியவற்றுக்காக, உலகம் முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். மும்பையிலிருந்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி தனது சைக்கிள் பயணத்தை துவக்கிய வைபவ் கடந்த மூன்று மாதங்களாக கோவா, கர்நாடகா வழியாக நேற்று ஊட்டி வந்தடைந்தார். ஊட்டியிலிருந்து புறப்படும் இவர் இந்தியா முழுவதும் இரண்டாண்டுகளும், பின்னர் மூன்றாண்டுகள் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். "எதிர்காலத்தில் எண்ணை வளம் குறையும் அபாயம் உள்ளதால், சைக்கிளில் தான் மக்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும்; இந்த பயணத்தால் இயற்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும் உடல் நலத்துக்கும் ஏற்றது என்பதை மக்களிடையே பிரசாரம் செய்த வருகிறேன்,' என வைபவ் தேசாய் தெரிவித்தார்.

No comments: