Monday, February 21, 2011

புவியியல் தகவல் தொழில் நுட்பம் (GIS) - 1

பத்தாம் வகுப்பில் வரலாறு, புவியியல் என்றொரு பாடம் இருந்தது. இப்போது இல்லை. சமூக அறிவியல் என்று மாற்றிவிட்டர்களாம். இணையத்தில் அந்தப் புத்தகத்தை தரவிறக்கிப் பார்த்தேன்.  ச்சை.. நாங்கள் அன்று படித்ததில் பகுதி கூட இல்லை. குதிரைக் குளம்பு ஏரி - இதன் ஆங்கிலப் பெயர் oxbow lake.  Oxbow வை எப்படி குதிரைக் குளம்பு என்று மொழி பெயர்த்தார்களோ - கடல் ஓதம் பொங்கும் முகம் (தவறில்லை,  High Tide க்குத் தமிழ் தான் "ஓதம் பொங்கும் முகம்") இப்படி ஒன்றிரண்டு விஷயங்களைத்தவிர தற்பொழுது வேறு எதுவும் நினைவில் இல்லை. அன்றைய புவியியல் வாத்தியார் "ஓதம்னா தெரியுமாடே" என்று உரக்க கேட்கும் போது, "தெரியும் சார் நம்ம ........க்கு இருக்கது தானே (பெயர் சொல்வதற்கில்லை..)" என்று போடும் கூச்சலில் ஒரு சிறு பொய்க் கலவரத்திற்கான சூழ்நிலை உருவாகி அடுத்த நாளில் தணியும்.

இன்றைய,  சமூக அறிவியலின் புவியியல் பாடத்தில் புதிதாக நிறைய விஷயங்கள் சேர்த்திருக்கிறார்கள். குடியுரிமை, தேர்தல் ஆணையம்,  GIS(Geographical Information System), GPS(Geographical Positioning System), களப்பணி முதலியவை. GIS பற்றி ஒரே ஒரு வரி வருகிறது. புவியியலை ஒரு பொருட்டாகவே அன்று படித்ததில்லை. மார்க் வாங்க வேண்டும் என்பதற்காக உருப்போடுவதோடு சரி. மற்ற பாடங்களில் இருக்கும் ஆர்வத்தில் சிறிதேனும் ம்ஹூம்..

ஹோஸ்னி முபாரக் கூட,  என்றாவது ஒரு நாள் தான் பதவி விலக நேரும் என்று  உறக்கத்திலாவது நினைத்திருக்கலாம். ஆனால், அன்று புறம் தள்ளிய புவியியலில் தான் 15 வருடமாக (.. and still going on..) கொட்டமடிக்கப் போகிறோம் என்று நினைத்துப் பார்த்திருப்பேனா?. விதி வலியது.

அலுவலகத்தில் திடீரென்று சென்ற வாரம் கூப்பிட்டு காலை உணவும், மதியச் சோறும் கொடுத்து கூடவே ஒரு பயிற்சியும் கொடுத்தார்கள். PCI Geomatica - என்பது விஷயம். அதாவது,  நாமெல்லோரும் ஒரு சமயம் கூகிள் எர்த்தில்  பெரிதாக்கி பெரிதாக்கி என்வீடு, உன்கடை என்றுப் பார்த்து பார்த்துப் புளங்காகிதம் அடைந்திருப்போமே, அந்த போட்டோக்களெல்லாம் எங்கிருந்து, எப்படி எடுத்து, வெட்டி, ஒட்டி, அலங்காரம் செய்து, ஒன்றாகப் பொருத்தி, வேறு பல தகவல்களைப் பிரித்தெடுத்து..........நிறைய இருக்கிறது.

பல்வேறு காரணங்களுக்காக மேற்படி வேலைகளை ஓவ்வொரு நாடும் ஒழுங்கு படுத்தி ஒரு டேட்டாபேஸ் வைத்துக்கொள்ளும். அந்த வேலையை தற்போது நான் குடியிருக்கும் நாட்டிற்காகச்  செய்யும் பலருள் அடியேனும் ஒருவன்.

பயிற்சி இடைவேளையில் ஒரு கோழிபீஸும் மண்ணடுப்பில் சுட்ட ரொட்டியும் சாப்பிட்டுவிட்டு ஆனந்தமாக இருந்த ஒரு சமயத்தில் தான் பத்தாம் வகுப்பு புவியியல் பாடம் நியாபகத்திற்கு வந்தது.  இன்றைய புவியியல் தகவல் தொழில்நுட்பம்(GIS) பற்றி அடுத்து ஒன்று இரண்டு பகுதிகளில் சற்று விரிவாக பார்ப்போம். இன்றைய பத்தாவது படிக்கும்  யாருக்காவது அது உபயோகப்பட்டால் நலனே!

No comments: