Thursday, February 10, 2011

வேகத்தடையை "வாய்ஸ்' மூலம் விழிப்புணர்வு செய்யும் கருவி: தர்மபுரி மாணவர்கள் சாதனை

 தர்மபுரி: சாலைகளில் உள்ள வேகத்தடை மற்றும் சாலையோரங்களில் உள்ள மருத்துவமனைகள், பள்ளிகள் இருப்பதை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும் "வாய்ஸ்' விழிப்புணர்வு கருவியை, தர்மபுரி மாணவர்கள் கண்டுபிடித்து அறிமுகம் செய்துள்ளனர்.
தர்மபுரி, பிடமனேரியை சேர்ந்தவர் ஜெயபாண்டியன். அவர் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறார். 200 புதிய கண்டுபிடிப்புகள் அடங்கிய அறிவியல் மியூசியம் அமைக்க, இந்தியன் அறிவியல் கல்வி அறக்கட்டளை மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறார். தர்மபுரி, கம்பைநல்லூர், பட்டகப்பட்டி கிராம மாணவர்கள் மற்றும் வெண்ணாம்பட்டி மாணவர்கள் மூலம் விஞ்ஞானி ஜெயபாண்டியன் சாலைகளில் உள்ள வேகத்தடை மற்றும் சாலையோரங்களில் உள்ள மருத்துவமனை, பள்ளிகள் இருக்கும் பகுதியில் வாகனம் கடக்கும் போது, 100 மீட்டர் இடைவெளியில், "இங்கே வேகத்தடை உள்ளது. வாகனத்தை மெதுவாக ஓட்டவும்' என, வாய்ஸ் கொடுக்கும் வகையில் இந்த கருவியை வடிவமைத்துள்ளார். இதற்காக வேகத்தடை இருக்கும் பகுதியில், ஒரு டவர் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு வாகனத்திலும் மிக குறைந்த விலையில் இதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு பாக்ஸ் இணைப்பு இருந்தால் போதுமானது. டவருக்கு 100 மீட்டர் தூரத்துக்கு முன், வாகனங்களில் எச்சரிக்கை அறிவிப்பு ஒலிபரப்ப துவங்கி விடும்.

சாதாரண ரிமோட் கார் மூலம் இதை அமைத்துள்ளார். டவர், வாகனத்தில் பொருத்த ஒரு பாக்ஸ் என, இந்த இரண்டின் மூலம் இந்த அறிவிப்பு செய்யப்படுகிறது. இரும்பு கம்பியால் ஆன ஐந்தடி உயர டவர் அதில் பிளாஸ்டிக் மூடியுடன் கூடிய டம்ளருக்குள் ரிமோட் காரின் கைப்பிடி ரிமோட் பொருத்தப்பட்டுள்ளது. இதில், மூன்று சேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சேனல்கள் மூலம் பள்ளி, மருத்துவமனை, வேகத்தடை உள்ளிட்ட விழிப்புணர்வை ஆன் செய்யும் வகையில், வாகனத்தில் பொருத்தப்படும் பாக்ஸில் ரிமோட் கார்டு போர்டு பொருத்தப்பட்டு, இயக்க வைக்கப்படுகிறது. பாக்ஸில் வீட்டில் பொருத்தப்படும் காலிங் பெல் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அதில் பொருத்தப்படும் பென் டிரைவ் யூனிட் மூலம் வாய்ஸ் ஒலிபரப்பாகும். மிக குறைந்த விலையில் தயார் செய்யப்பட்டுள்ள இந்த டவரை பயன்படுத்துவதன் மூலம், வாகனங்கள் சாலையில் கவனமாக ஓட்டி செல்ல வாய்ப்பு ஏற்படும்.

மாணவர்களை வைத்து தயார் செய்யப்பட்ட இந்த டவர் மற்றும் பாக்ஸ் அறிமுகம் நேற்று மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. சமீபத்தில் தனது அறிவியல் கண்டிபிடிப்பு தோல்வி அடைந்ததால், தற்கொலை செய்து கொண்ட இன்ஜினியர் கல்லூரி மாணவர் பிரேம்குமாருக்கு இந்த கண்டுபிடிப்பை சமர்பித்து, அவருக்கு மவுன அஞ்சலி செலுத்தியும் இதை அறிமுகம் செய்து வைத்தனர். பின்னர், சாலையில் டவர் வைக்கப்பட்டு, இரு சக்கர வாகனம் மற்றும் சரக்கு ஆட்டோக்களில் பாக்ஸை பொருத்தி, வாய்ஸ் விழிப்புணர்வு செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதை பரம்வீர் பாலிடெக்னிக் மாணவர்கள் மற்றும் கம்பைநல்லூர் பட்டகப்பட்டி கிராம மாணவர்கள், வெண்ணாம்பட்டி மாணவர்கள் பார்வையிட்டனர். இதன் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு அறிவியல் அறக்கட்டளை ஜெயபாண்டியன் விளக்கினார்.

இப்புதிய கண்டுபிடிப்பு குறித்து பரம்வீர் பாலிடெக்னிக் ஆசிரியர் வினோத் கூறுகையில், ""ஏற்கனவே உள்ள கண்டுபிடிப்பு முறைகளுக்கு, எளிய முறையில் மாற்று கண்டுபிடிப்பாக இது உள்ளது. பொதுவாக படித்தவர்களின் சிந்தனை ஒரே கோட்பாடுடன் இருக்கும். ஜெயபாண்டியன் படிக்கவில்லை என்றாலும், ஏற்கனவே உள்ள எளிய பொருட்களை புதிய கண்டுபிடிப்புகளுக்கு பயன்படுத்தி, இது போன்று எளிதாக அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும் என நிரூபித்துள்ளார்,'' என்றார்.

No comments: