Monday, January 3, 2011

தென் ஆப்பிரிக்காவில் காந்தி வாழ்ந்த வீட்டை வாங்க இந்தியா முயற்சி; நினைவு சின்னம் ஆக்க திட்டம்



ஜோகனஸ்பர்க்,  ஜன. 3-
தென்ஆப்பிரிக்காவில் காந்தி வாழ்ந்த வீட்டை வாங்கி அதை நினைவு சின்னமாக்க இந்தியா முயற்சி செய்து வருகிறது.   மகாத்மா காந்தி தென்ஆப்பிரிக்காவில் சில காலம் தங்கியிருந்து வக்கீல் தொழில் புரிந்தார். அப்போது கடந்த 1908 முதல் 1910-ம் ஆண்டு வரை ஜோகனஸ்பர்க் நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.
 
அந்த வீடு கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஏலத்தில் விடப்பட்டது. அதை இந்திய நிலக்கரி நிறுவனம் வாங்க முயற்சி செய்தது. ஆனால் அதை பிரான்ஸ் சுற்றுலா நிறுவனம் ஒன்று ரூ.1 கோடியே 75 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. எனவே அப்போது அந்த வீட்டை வாங்க முடியவில்லை.   இந்த நிலையில் அந்த வீட்டை ஏலத்தில் எடுத்த நிறுவனம் பத்திரப்பதிவு செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளது.
 
இதை தொடர்ந்து அந்த வீட்டை மீண்டும் விலைக்கு வாங்க இந்திய நிலக்கரி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான முயற்சியில் நிலக்கரித்துறை மந்திரி ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் ஈடுபட்டுள்ளார். அரசு முறை பயணமாக தென் ஆப்பிரிக்காவில் உள்ள மொஷாம்பி நகருக்கு நாளை (4-ந்தேதி) புறப்படுகிறார். அங்கு செல்லும் அவர் ஜோகனஸ்பர்க் நகருக்கு சென்று அந்த வீட்டின் பெண் உரிமையாளரை சந்தித்து பேசி காந்தி வாழ்ந்த வீட்டை விலை பேசி முடிக்க உள்ளார். இந்த தகவலை அவரே தெரிவித்துள்ளார்.
 
மேலும் அந்த வீட்டை நினைவு சின்னமாக மாற்றவும் திட்ட மிடப்பட்டுள்ளது. காந்தி கடந்த 1893-ம் ஆண்டு ஒரு வழக்கில் ஆஜராகி வாதாட தென்ஆப்பிரிக்காவில் உள்ள விக்டோரியாவுக்கு சென்றார். சத்தியாகிரக போராட்டம் தென்ஆப்பிரிக்காவில் காந்தி பெயரில் பல நினைவு சின்னங்கள் உள்ளன. ஜோகனஸ்பர்க் மத்திய பகுதியில் காந்தி சதுக்கமும், போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்ட ஜோகனஸ்பர்க் சிறை போன்றவை உள்ளன.
 
அதே போன்று டர்பன் நகரிலும் பல இடங்கள் உள்ளன. சத்தியாகிரக போராட்டத்தை அங்கு தான் அவர் முதன் முதலில் தொடங்கினார். ஜோகனஸ்பர்க் நகருக்கு 1903-ம் ஆண்டு அவர் சென்றார். தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்களுக்கு எதிராக இனவெறி போராட்டத்தில் ஈடுபட்டார். வெள்ளையர்கள் மட்டும் பயணம் செய்யும் பெட்டியில் ஏறியதற்காக பீட்டர் மார்ட் பர்க் ரெயில் நிலையத்தில் ரெயிலில் இருந்து அவர் கீழே தள்ளி விடப்பட்டார்

No comments: