Tuesday, September 13, 2011

சென்னை நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி?போதுமான வசதிகள் இல்லாத அவலம்

பயங்கரவாதிகள் மிரட்டல், டில்லி குண்டு வெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக தலைநகரான சென்னையில் செய்யப்பட்டுள்ள (?) பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமான அளவில் இல்லாததால், பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது.
நாட்டில் எந்த பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினாலும், சென்னை நகருக்கு உடனடியாக, "அலர்ட் மெசேஜ்' அனுப்பப்படுவது வழக்கம். மத்திய, மாநில உளவுத்துறைகளின் அறிக்கைகள் அடிப்படையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர காவல்துறை செய்து வருகிறது.முக்கிய வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், ரயில்நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் பயங்ரவாதிகளின் இலக்காக இருப்பதால், அப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.நகர் முழுவதும் வாகன தணிக்கையில் முழுவீச்சில் போலீசார் ஈடுபடுவதும் தொடர்கிறது. சென்னையில், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஆனால், இத்தகைய முக்கிய இடங்களில் பாதுகாப்பு முழுமையாக இல்லை என்பது காவல்துறையின் ஒரு சாராரே வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். பயங்கரவாதிகள் ஊடுருவினால் தடுக்க முடியுமா என்பதை தெரிந்து கொள்ளும்வகையில் நடக்கும் சிறப்பு "ஆபரேஷன்'களிலும் இந்த பாதுகாப்பு குறைபாடு விவகாரம் வெளிப்படையாக தெரிந்துள்ளது. இத்தகைய குறைபாடுகள் குறித்து வெளிப்படையான விவாதமோ, குறைகளை சரி செய்ய தேவையான நடவடிக்கைகளோ முழுமையாக எடுக்கப்படுவதில்லை.
முக்கிய இடங்களில் பாதுகாப்புகுறைபாடு இருப்பது போல், சென்னையில் உள்ள லாட்ஜ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், அதை எத்தனை பேர் பின்பற்றுகின்றனர் என்பதை தொடர்ந்து போலீசார் கண்காணிக்க வேண்டும்.மேலும், பொது தொலைபேசி மற்றும் இன்டர்நெட் மையங்கள் வாயிலாக நிறைய எச்சரிக்கைகள் மற்றும் வதந்திகள் பரப்பப்படுகின்றன. இங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இவை நடைமுறையில் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்ய வேண்டும். இதுபோன்றவற்றை கண்காணிப்பதற்கு தனிப்பிரிவு அமைத்தால், பாதுகாப்பு மேலும் பலப்படும். இதற்கான ஏற்பாடுகளும் பலவீனமாகவே உள்ளது.பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், சென்னை நகரின் பாதுகாப்பு விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டும். நவீன பாதுகாப்பு கருவிகளை போலீசாருக்கு வழங்குவதன் மூலமும், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.
இது குறித்து பேசிய பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர், ""நாட்டில் எந்த ஒரு அசம்பாவித சம்பவம் நடந்தாலும், தலைநகர போலீசார், "அலர்ட்' செய்யப்படுகின்றனர். முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, சோதனை நடத்தப்படுகிறது. வாகன சோதனையும் நடக்கிறது.போதுமான அளவில் போலீசார் இல்லாததால், இப்பணியில் முழுவீச்சில் ஈடுபட முடியாத நிலையும் ஏற்படுகிறது. அதே நேரத்தில், சோதனை உள்ளிட்ட போலீசாரின் நடவடிக்கைகள், குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை அச்சமடைய செய்யும். இதுவும் ஒருவகையான தடுப்பு நடவடிக்கையாகவே கருத வேண்டும்."மெட்டல் டிடெக்டர்' போன்ற கருவிகளை தாண்டி, நவீன கருவிகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், ஒரே நேரத்தில் பல இடங்களில், நவீன கருவிகளை பயன்படுத்துதல் என்பது சாத்தியமில்லாதது. அதே போல், இத்தகைய கருவிகளை கையாள்வது குறித்து, போதுமான பயிற்சிகளையும் வழங்க வேண்டியுள்ளது'' என்றார்.
தனியார் செயல்பாடு:காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் காட்டிலும், தனியார் ஓட்டல்கள், நிறுவனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாகவே உள்ளன. நட்சத்திர ஓட்டல்களில் உள்ளே நுழையும் கார்கள் அனைத்தும் சோதனைக்கு பின்பே அனுப்பப்படுகின்றன. தனிநபர்களும் சோதனைக்கு பின்பே அனுப்பப்படுகின்றன.பிரபல தனியார் வங்கிகள், தனியார் ஐ.டி., நிறுவனங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாகவே உள்ளன. பயங்கரவாத அச்சுறுத்தலின் தீவிரம் உணர்ந்து, இவர்கள் தாங்களாகவே பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மறைமுக பாதுகாப்பில் பின்தங்கியுள்ளோம்:சென்னையின் பாதுகாப்பு குறித்து ஓய்வு பெற்ற டி.ஜி.பி., நட்ராஜ் கூறியதாவது:பாதுகாப்பு என்பது இரண்டு வகை. வெளிப்படையான பாதுகாப்பு ஒன்று. மறைமுக பாதுகாப்பு ஒன்று. ரயில் மற்றும் பஸ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசாரை குவிப்பது. வாகன தணிக்கையில் ஈடுபடுவது வெளிப்படையான பாதுகாப்பு. தகவல்களை சேகரித்து அதனடிப்படையில் ஆராய்ந்து பாதுகாப்பை பலப்படுத்துவது என்பது மறைமுக பாதுகாப்பு. இந்த விஷயத்தில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம்.பொதுவாக, வழக்குகள் அடிப்படையில் தகவல்களை சேகரிக்க வேண்டும். சிறிய வழக்காக இருந்தாலும் சரி, அதிலும் நமக்கு நிறைய தகவல்கள் கிடைக்கும். இதற்கென கீழ்மட்டத்திலும் உயர் மட்டத்திலும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இப்போது இருக்கிற மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகளை, சரியான அளவில் டியூன் செய்ய வேண்டும். இதற்கென உள்ள மென்பொருள்களை பயன்படுத்த வேண்டும். சில இடங்களில் உயர் தொழில்நுட்பம் இல்லை என்றாலும் கூட, இவ்வாறான பாதுகாப்பை காணும் போது குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட நினைப்பவர்கள் அஞ்சுவார்கள்.இவ்வாறு நட்ராஜ் கூறினார்.
முக்கியமான இடங்களில் பாதுகாப்பு நிலை என்ன?
விமான நிலையம் : * இங்குள்ள "இன்லைன் ஸ்கேனர்' கருவி அடிக்கடி பழுதாவதால் சோதனையில் பெரும் பின்னடைவு ஏற்படுகிறது*"ரன்வே'யில் திடீரென யாராவது நுழைந்து ஓடுகின்றனர். பிடித்து விசாரித்தால், ஒன்று அவர்களை குடிகாரன் என்றோ அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றோ கூறி அந்த விஷயத்தை அத்தோடு முடித்து விடுகின்றனர்.*சமீபத்தில் கார்கோ விமானத்தில் நுழைந்த சிறுவனை பிடிக்க பெரும்பாடு பட்ட சம்பவம் நடந்துள்ளது.*வாகன நிறுத்துமிடங்களிலும் போதுமான கண்காணிப்பு கேமராக்கள் இல்லை.
சென்ட்ரல் ரயில் நிலையம்:* இங்கு பிரதான வாயில்களில் மட்டுமே பயணிகளின் உடமைகளை சோதனை செய்யும் ஸ்கேன் கருவி உள்ளது. புறநகர் ரயில் நிலையம் அருகேயுள்ள வாயில், தபால் பிரிவு உள்ளிட்ட வாயில்களில் கேமரா கூட இல்லை.*"பிரீபெய்ட்' ஆட்டோ நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா இல்லை. தொலைவில் அமைக்கப்பட்டுள்ள கேமரா மட்டுமே உள்ளது. இதன் மூலம் எந்தளவிற்கு துல்லியமாக கண்காணிக்க முடியும் என்பது கேள்விக்குறியே.* அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டால், பயணிகள் நுழைந்து செல்லும் மெட்டல் டிடெக்டர் கருவியில், "ப்யூஸ்' கட்டாகி செயல் இழந்து விடுகிறது.* புறநகர் ரயில் நிலையத்தையும் சேர்த்து 48 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. ஆனால் அவற்றில் சில பழுதாகி, இயங்காமல் உள்ளது.*வால்டாக்ஸ் சாலையில் உள்ள சரக்கு மையத்தில் கேமரா இல்லை. எக்ஸ்பிரஸ் ரயில்களில் வரும் பார்சல்கள் இங்கு தான் பிரித்து அனுப்பப்படுகிறது.*எந்த கண்காணிப்பு கேமராவிலும் பதியாமல், பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையம் வழியாக சுலபமாக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் வரக்கூடிய அளவிலேயே பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன.எழும்பூர் ரயில் நிலையம்*சென்ட்ரலை போலவே இங்கும் பல நுழைவாயில்கள் உள்ளன. அனைத்திலும் கண்காணிப்பு என்பது குறைவே.* மூன்று நுழைவாயில்களில் மட்டும் மெட்டல் டிடெக்டர் கருவி உள்ளது. அனைத்தும் காட்சி பொருளாக மட்டுமே உள்ளது.* கார் மற்றும் இருகர வாகன நிறுத்துமிடத்தில் கண்காணிப்பு கேமரா கூட இல்லைக்ஷ
கோயம்பேடு பஸ் நிலையம்:*பஸ்நிலையத்தின் பின்புறம் உள்ள, பஸ்கள் வந்து செல்லும் பகுதியில் எந்த கண்காணிப்பும் இல்லை. இங்கு பயணிகள் போர்வையில் யார் வேண்டுமானாலும், சுலபமாக நுழைந்து கோயம்பேடு பஸ்நிலையத்திற்குள் செல்லலாம்.* போதுமான போலீசார் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதில்லை.*சி.எம்.டி.ஏ., அமை த்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்தவர்களே மெட்டல் டிடெக்டரில் பயணிகளை சோதனை செய்கின்றனர். இவர்களுக்கு எந்தளவுக்கு அதில் திறமை உள்ளது என்பது கேள்விக்குறியே.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=312111

No comments: