Wednesday, December 22, 2010

பழைய இரும்பு பொருட்களுக்கு "புது வாழ்வு' : வெல்டிங் சிற்பத்தில் அசத்தும் புதுச்சேரி சிற்பி

புதுச்சேரி குருசுக்குப்பம் ஆரோதன் கலைக்கூடத்தில், மறுசுழற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வெல்டிங் சிற்பக் கண்காட்சி நேற்று துவங்கியது.வீட்டில் தேவையில்லாத பழைய இரும்பு பொருட்கள் இருந்தால், அதை முதல் வேலையாக தூக்கி எறிந்து விடுவோம் அல்லது பழைய இரும்பு கடைக்காரரிடம் நல்ல விலைக்கு விற்று விடுவோம். ஆனால், புதுச்சேரி மூலக்குளம் கோபாலன் கடை மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் சரவணா (26) மாறுபட்டு சிந்தித்து, "வேஸ்ட் இரும்பு துண்டுகளை' கொண்டு அழகிய சிற்பங்களை உருவாக்கி உள்ளார்.
இவருடைய கைவண்ணத்தில் வெல்டிங் சிற்பக் கண்காட்சி, குருசுக்குப்பம் பிரான்சுவா மர்த்தேன் வீதியில் உள்ள ஆரோதன் கலைக்கூடத்தில் நேற்று துவங்கியது. இக்கண்காட்சியில், பிரமாண்டமான தேர் சிற்பம் பார்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது. மங்கள வாத்திய கருவிகள் முழங்க, ஊர் கூடி தேர் இழுக்கும் காட்சி 75 கிலோவில் பல வகையான இரும்பு துண்டுகள் கொண்டு, தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இதுமட்டுமின்றி, ஆக்ரோஷமாக சீறும் சண்டைக் கோழிகள், பூவில் வட்டமிட்டபடியே காதல் கொள்ளும் தட்டான் பூச்சிகள், சோகங்களை மறந்து இசை மீட்டும் கலைஞர்கள், பழங்குடியினரின் பாரம்பரிய முகமூடி, நாட்டியமாடும் நடராஜப் பெருமான், மணற்பரப்பில் ஊர்ந்து செல்லும் ஆமை கூட்டங்கள், விழுதுகளை மண்ணில் இறக்கி உயிர்கொள்ளும் ஆலமரம் என, விதவிதமான காட்சிகள் இயல்பாக வெல்டிங் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

பழைய இரும்பு பொருட்களால் வெல்டிங் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை உணர்த்துவதற்காக, பெயின்டிங் செ#யப்படவில்லை. இயற்கை அல்லது செயற்கையில் தயாரிக்கப்பட்ட எந்த பொருட்களும் வீணான பொருட்கள் அல்ல. அதை நாம் புதிய கோணத்தில் பார்த்தால், பயனுள்ள பொருட்களாக மாற்ற முடியும் என்பதை இந்த வெல்டிங் சிற்பங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.பழைய இரும்பு பொருட்களையும் கலைநயமிக்க பயனுள்ள பொருட்களாக மாற்ற முடியும் என்பதை, வெல்டிங் சிற்பங்கள் மூலம் அழுத்தமாக நிரூபித்துள்ளார். இயற்கை மீது பற்று கொண்டவர்களுக்கும் மறுசுழற்சி ஆர்வலர்களுக்கும் வெல்டிங் சிற்பக் கண்காட்சி ஒரு வரப்பிரசாதம்.
வெல்டிங் சிற்பக் கண்காட்சி ஆரோதன் கலைக்கூடத்தில், ஜனவரி 5ம் தேதி வரை நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை தவிர்த்த மற்ற நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை கண்காட்சியை கண்டு ரசிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, 0413-2222795, 2222449 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments: