Monday, December 20, 2010

இரவு சாப்பாட்டுக்கு முன்பு சாப்பிடும் “நொறுக்கு தீனி நீரிழிவு நோயை அதிகரிக்கும்” மருத்துவ ஆய்வில் தகவல்

நம்நாட்டின் நகர்புற மக்கள் டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்தபின் நீண்ட நேரம் கழித்து இரவு உணவை சாப்பிடுகின்றனர். அதன் விளைவு நீரிழிவு நோய் பாதித்து அவதிப்படுகின்றனர். இந்த கொடிய நீரிழிவு நோய்க்கு பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் அவர்களின் அன்றாட சாப்பாட்டு பழக்க வழக்கமே காரணம் என மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
ஒரு தனியார் நிறுவனம் மும்பை, டெல்லி, கொல் கத்தா, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட 5 மெட்ரோ பாலிட்டன் நகரங்களில் வாழும் 1000 குடும்பங்களிடம் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டது. அதில் இரவு சாப்பாட்டுக்கு முன்பு சாப்பிடும் நொறுக்கு தீனி (ஸ்னேக்ஸ்) தான் நீரிழிவு நோய்க்கு காரணம் என தெரியவந்துள்ளது.
 
மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் தான் இரவு சாப்பாடு மிகவும் நேரம் கழித்து சாப்பிடுகின்றனர். இங்கு 30 சதவீதம் முதல் 40 சதவீதம் பேர் இரவு 9.30 மணிக்கும், 11.30 மணிக்கும் இடையேதான் சாப்பிடுகின்றனர்.
 
சென்னையில்தான் இரவு சாப்பாட்டை சரியான நேரத்தில் சாப்பிடுகின்றனர். 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட தாய்மார்களும், குழந்தைகளும் இரவு 9.30 மணிக்கு முன்னதாகவே தங்கள் உணவை சாப்பிட்டு முடித்து விடுகின்றனர். இந்த விஷயத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக பெங்களூர் திகழ்கிறது.
 
பெரும்பாலான மெட்ரோ பாலிட்டன் நகரங்களில் 10 குழந்தைகளில் 6 பேர் தினமும் இரவு 6 மணி முதல் 8 மணிவரை நொறுக்கு தீனியை சாப்பிடுகின்றனர் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இத்துடன் சேர்த்து உடல் பருமன் நபர்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் இந்தியா முழுவதும் 2 கோடி பேர் உடல் பருமானால் அவதிப்படுவது தெரியவந்துள்ளது. அவர்களில் மும்பை பள்ளிகளில் மட்டும் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளில் 20 சதவீதம் பேர் இந்த நோயினால் கஷ்டப்படுகின்றனர்.

No comments: