Friday, October 29, 2010

நாராயண மூர்த்தியின் நல்ல ஆலோசனை!


FILE
தகவல் தொழில்நுட்பத்தில் (ஐடி) பட்டம் பெற்றால், நல்ல ஊதியத்தில் எங்கு வேண்டுமானாலும் செட்டில் ஆகி விடலாம் என்கிற இளையோரின் பார்வை ‘சரியான திட்டமல்’ என்று இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி கூறியுள்ளது சரியான நேரத்தில் வழங்கப்பட்டுள்ள மிகச் சிறந்த ஆலோசனையாகும்.

அதிலும் குறிப்பாக, ஹெச் 1பி விசா பெற்றுக் கொண்டு அமெரிக்காவில் பணி பெற்று, பிறகு பச்சை அட்டை பெற்றுக்கொண்டு அந்நாட்டிலேயே செட்டில் ஆகி விடலாம் என்கிற கண்ணோட்டம் தவறானது என்றும் நாராயண மூர்த்தி கூறியுள்ளது கவனிக்கத் தக்கதாகும்.

பெங்களூருவில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய நாராயண மூர்த்தி, “தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி பெற்று இணைந்தால் அமெரிக்கா சென்று விடலாம் என்றும், ஹைச் 1 பி விசா பெற்று அங்கு போய், பிறகு பச்சை அட்டை பெற்றுக் கொண்டு வாழ்க்கையில் நிரந்தரமாக அங்கேயே இருந்துவிடலாம் என்று நமது இளையோர் நினைக்கின்றனர். இது ஒரு தவறான தீர்வென்றே நான் கருதுகிறேன், மிகத் தவறான வாழ்க்கைத் திட்டமும் கூட” என்று கூறியுள்ளார். அத்தோடு நிற்கவில்லை, உறுதியான எதிர்காலத்திற்கான வழியையும் காட்டியுள்ளார், அது முக்கியமானது.

“இளையோர் நல்ல பணியையும் ஊதியத்தையும் இந்தியாவிலேயே பெற வேண்டுமெனில் அவர்கள் அதற்கேற்ற நல்ல பணி வாய்ப்பைப் பெறவேண்டும். இதற்காக நீங்கள் அமெரிக்காவோ அல்லது வேறு ஒரு அயல் நாட்டிற்கோ செல்ல வேண்டும் என்று திட்டமிடக்கூடாது. இந்தியாவிலேயே சிறந்த பணியை பெற்று, இங்கேயே உறுதியாக வாழும் வாய்ப்புகள் உருவாகிவிட்டன. நாங்கள் உருவாக்கியுள்ள அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு மிகச் சிறந்த தொழில் நெறிஞர்களாக நீங்கள் உருவாக்கிக்கொண்டு இந்தியாவின் வளர்ச்சியில் உங்களுடைய எதிர்காலத்தை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும், அதைத் தவிர்த்துவிட்டு நிரந்தரமற்ற எதிர்காலத்தை நோக்கிச் செல்லக் கூடாது” என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.

FILE
மற்றொரு வகையிலும் நாராயண மூர்த்தி கூறியதை சீர்தூக்கிப் பார்ப்பது இளையோருக்குப் பயனளிக்கும். தங்களது நாட்டில் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவையடுத்து உருவான வேலையின்மை பிரச்சனையை தீர்க்க, அயல் நாட்டுப் பணியாளர்களை நாட்டிற்குள் அனுமதிப்பதை தடுக்க நினைக்கிறது அமெரிக்கா. இந்த சிந்தனை ஒரு கொள்கை முடிவாக அந்நாட்டில் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அரசின் ஒப்பந்தப் பணிகளை அயல் வணிகப் பணிகளாக (Business process Out-sourcing) மற்ற நாடுகளுக்கு வழங்க ஒஹையோ மாகாண அரசு விதித்துள்ள தடையும், அமெரிக்க நிறுவனங்கள் அயல் நாடுகளில் அலுவலகம் அமைத்து பணிகளை நிறைவேற்றி பெற்றுவரும் வருவாய்க்கு அளித்துவரும் வரிச் சலுகையை நிறுத்திவிட்டு, அமெரிக்காவிலேயே பணி வாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு அந்த வரிச் சலுகையை அளிக்க விரும்புகிறேன் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பேசியிருப்பதும், அமெரிக்காவிற்கு பணியாற்ற வரும் தொழில் நெறிஞர்கள் பெற வேண்டிய ஹெச் 1பி, எல் 1, எல் 2 விசா கட்டணங்களை 2,000 முதல் 2,500 டாலர்கள் வரை உயர்த்தியுள்ளது ஆகியவற்றை பரிசீலிக்கும்போது, இதற்கு மேலும் அயல் நாட்டவருக்கு ஊதியப் பணிகளுக்கான ஒரு நாடாக அமெரிக்கா இருக்கப் போவதில்லை என்பது தெளிவாகிறது. இந்த காரணங்களே நாராயண மூர்த்தி ‘நிரந்தரமற்ற எதிர்காலம்’ என்று கூறுவதற்கு அடிப்படையாகவும் இருக்கலாம்.

“நமது நாட்டிலேயே மிகச் சிறந்த தொழில் நெறிஞர்களை உருவாக்கக்கூடிய தரமான பள்ளிகளை, கல்லூரிகளை நிறுவ வேண்டும், இது ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் அல்ல, நம்மால் செய்யக் கூடியத” என்றும் நாராயண மூர்த்தி கூறியுள்ளார். நமது நாட்டு மத்திய மாநில அரசுகள் கல்வியை தொழில், வர்த்தகம் ஆகியவற்றை தனியார் மயம், உலக மயம் ஆக்கிவருவதைப் போல, கல்வியையும் தனியார் மயமாக்கி, இப்போது உலகமயமாக்கி வருகின்றன. எனவே தரமான பள்ளிகள், கல்லூரிகள் என்பதெல்லாம் நமது நாட்டில் ஒரு குறுகிய எதிர்காலத்தில் நடந்தேறக் கூடியதல்ல.

ஆனால், பள்ளியில் சிறப்பாக படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அணு சக்தி உள்ளிட்ட உயர் தொழில் நுட்ப அறிவியல் துறைகளில் உள்ள நிரந்தரமான எதிர்காலம் குறித்து விரிவாக எடுத்துரைக்க வேண்டும். இதனை கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் கடந்த சில ஆண்டுகளாக செய்து வருகிறது.

No comments: